கவுகாத்தி: இந்திய அணிக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் அல்லாத வீரராக அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் என்ற அஜிங்க்யா ரஹானேவின் சாதனையை முறியடித்து, 9 கேட்ச்களுடன் அவர் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். இந்தச் சாதனையை மார்க்ரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசையைச் சரித்ததில் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வளவு பங்குண்டோ, அதைவிட அதிக பங்கு ஸ்லிப்பில் நின்ற ஐடன் மார்க்ரமுக்கு உண்டு. இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த சிறு தவறுகளைக்கூட அவர் துல்லியமான கேட்ச்களாக மாற்றி, அணியின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்காற்றினார்.

இந்தப் போட்டி முழுவதும் மார்க்ரம் மொத்தம் 9 கேட்ச்களைப் பிடித்து இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 5 கேட்ச்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 கேட்ச்களையும் பிடித்து அவர் அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்சனின் கேட்சைப் பிடித்தபோது, அவர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனையை நிகழ்த்தினார்.
IND vs SA: எந்த அணியும் செய்யாததை செய்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவை 2 முறை ஒயிட்வாஷ் செய்த ஒரே அணி
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும், இந்த டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தது.