சௌதாம்ப்டன் : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சேஸிங்கின் போது குறைந்தது ஆறு முறையாவது ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் வாய்ப்பு இருந்தது.
தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா வீசிய பந்து நெருப்பைக் கக்கிக் கொண்டு பறந்தது. ஆனால், அவரது திறன் மட்டுமே விக்கெட் எடுக்கப் போதுமானதாக இல்லை. ரோஹித் சர்மாவிற்கு அதிர்ஷ்டம் இருந்தது. இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் வெற்றியுடன் துவக்கச் செய்ய தன் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தினார்.
அவரது ஆட்டம், வெறும் எண்களுக்காக இல்லாமல், அவரது முதிர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது. எப்படி ஆடினாலும் பரவாயில்லை, வெற்றி பெற வேண்டும் என்ற பொறுப்பாக அது இருந்தது.
பந்து சுமார் 90 மைல் வேகத்தில் காதுகளில் ரீங்காரம் இடும் போதும், நம்மை அப்படியே இரண்டாக பிளந்து விடுவது போல வரும் போது, அதை அடித்து ஆட வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், ரோஹித் சர்மா தன் சுயநலத்தை விடுத்து, அணிதான் முக்கியம் என முடிவு செய்து ஆடி அசத்தினார்.
ரோஹித் சர்மா, துவக்கத்தில் சந்தேகத்தோடு ஆடி, பின்னர் தயங்கி, தடுமாறி, நீண்ட நேரம் களத்தில் நின்று, இலக்குக்கு அருகே வந்தவுடன் அதிரடி காட்டி, தன் 23வது ஒருநாள் போட்டி சதத்தை கடந்தார்.
அந்த சதம் அவரை உலக அளவில் அதிக சதம் அடித்தவர்கள் மத்தியில் ஒன்பதாவது இடத்துக்கு அழைத்துச் சென்றது. இந்திய அளவில் சௌரவ் கங்குலியை முந்தி, சச்சின், கோலிக்கு கீழே இடம் பெற்றார்.
ரோஹித் ஒருமுறை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ்-இன் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பில் இருந்து தப்பினார். அது போன்ற பல சம்பவங்கள் நடந்தாலும், ரோஹித் பொறுமை இழக்கவில்லை. தன் கவனத்தை காற்றில் பறக்கவிட்டு விடவில்லை.
ரோஹித் மிகப் பெரிய சதங்கள் எல்லாம் அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், அதை விட இந்த சதம் முக்கியமானது. காரணம், இது அடிக்கப்பட்ட விதமும், இது நிகழ்ந்த மேடையும் அப்படி.
கோலி பேசும் போது, "உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி தரும் அழுத்தத்தை வைத்து பார்க்கும் போது, என் கருத்துப்படி, இதுதான் அவரது சிறந்த ஒருநாள் இன்னிங்க்ஸ்." என்றார்.
ரோஹித் தன் இன்னிங்க்சை மிக கவனமாக கையாண்டார். தனது 23வது பந்து வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் 50 ரன்களை எட்ட 70 பந்துகளை எடுத்துக் கொண்டார். இம்ரான் தாஹிர், ஷாம்சி பந்து வீச வந்த போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
50 முதல் 100 ரன்களை எடுக்க 58 பந்துகளை எடுத்துக் கொண்டார். இறுதியில் ஹர்திக் பண்டியா உடன் இருக்க இலக்கை எட்ட விரைவாக ரன் எடுத்தார். "எந்த இடத்திலும் அவர் விக்கெட்டை இழந்து விடுவார் என நாங்கள் நினைக்கவில்லை" என்று இது பற்றி கோலி குறிப்பிட்டார்.