மும்பை: மகளிர் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீராங்கனை உல்வார்ட் மற்றும் டிரியன் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல தீப்தி சர்மா காரணமாக அமைந்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷெபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் அபார ஆட்டம் காரணமாக 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு கேப்டன் உல்வர்ட் - ப்ரிட்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ப்ரிட்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வந்த பாஸ்ச் டக் அவுட்டாகி வெளியேற, உல்வர்ட் லூயிஸ் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆனால் ஷெபாலி வர்மாவின் அபார பவுலிங்கால் லூயிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் கேப்டன் உல்வர்ட் மட்டும் தனியாளாக போராடி கொண்டிருந்தார். சிறப்பாக ஆடிய அவர் 96 பந்துகளில் சதம் அடிக்க, தென்னாப்பிரிக்கா அணி வேகமாக இலக்கை நோக்கி முன்னேறியது.
கடைசி 9 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தீப்தி சர்மா வீசிய ஒரே ஓவரில் உல்வர்ட் 101 ரன்களிலும், தொடர்ந்து வந்த டிரியன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலமாக 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதோடு, முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு தீப்தி சர்மா மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். பேட்டிங்கில் அரைசதம் விளாசிய அவர், பவுலிங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார்.