சென்சுரியன்: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேனா என்ற அனைவரின் சந்தேகங்களுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்சுரியனில் நடக்கும் பாக்சிங் டே போட்டி என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சிராஜ், அஸ்வின் உள்ளிட்டோர் களமிறங்கவுள்ளதால் ரசிகர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ரோகித் சர்மா பேசுகையில், தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஒருவேளை இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இந்த டெஸ்ட் தொடரை வெல்வதன் மூலமாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியை ஈடு செய்ய முடியாது. ஏனென்றால் உலகக்கோப்பை என்பது எந்த தொடருடனும் ஒப்பிட முடியாது. இதனை அவ்வளவு எளிதாக உலகக்கோப்பையுடன் ஒப்பிட முடியவில்லை. ஆனால் டெஸ்ட் தொடரின் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இதனை வென்றால், இந்திய வீரர்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.
இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். அதற்கான திட்டமிடலுடன் களமிறங்க உள்ளோம். அதேபோல் கிரிக்கெட் ஆடுவதே எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று தான். அந்த வாய்ப்பு எங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், எப்போது கிடைத்தாலும் நிச்சயம் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை நினைக்கிறீர்காள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அனைவரின் கேள்விகளுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.