மும்பை: 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் நிகழ்ந்த ஒரு சிறு உரையாடல், தனக்கு அளப்பரிய நம்பிக்கையை அளித்து, ஆட்டத்தையே மாற்றியதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்கு ஷஃபாலி வர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்தது. பேட்டிங்கில் 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்திய அவர், பந்துவீச்சிலும் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதைத் தட்டிச் சென்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஷஃபாலி, போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தது தனது தன்னம்பிக்கையை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகக் கூறினார். "நான் சச்சின் சாரை சந்தித்தபோது, அது எனக்கு நம்பமுடியாத ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது," என்று ஷஃபாலி குறிப்பிட்டார்.
"நான் அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன், அவரும் எனக்குத் தொடர்ந்து நம்பிக்கை அளித்தார். அவர் கிரிக்கெட்டின் மாஸ்டர். அவரைப் பார்ப்பதே எங்களுக்கு ஒரு பெரிய உத்வேகம் தான்" என்று அவர் கூறினார்.
ஷஃபாலி வர்மாவிற்கு இந்த உலகக்கோப்பைத் தொடர், மிகப் பெரிய "கம்பேக்" கதையாக அமைந்தது. கடந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், மோசமான ஃபார்ம் காரணமாகப் போராடி வந்தார். நிரந்தர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே, இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஷஃபாலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்ததால், இறுதிப் போட்டியில் அவர் இப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் களமிறங்கிய ஷஃபாலி அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மிருதி மந்தனா (45) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24) ஆகியோருடன் இணைந்து பார்ட்னர்ஷிப்களை அமைத்தார். இந்திய அணி 298 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டம், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது.
பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் ஷஃபாலி தனது முத்திரையைப் பதித்தார். தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஷஃபாலியிடம் பந்தைக் கொடுத்தார். இந்த முடிவை பின்னர் விவரித்த ஹர்மன்ப்ரீத், "அது எனது உள்ளுணர்வு தந்த முடிவு" என்றார்.
"இது ஒரு ரிஸ்க்கான முடிவு என்று எனக்கும் தெரியும். ஆனால், ஷஃபாலியிடம் நான் பேசியபோது, அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். நான் அவரிடம் ஓவரைக் கொடுத்தேன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அதுதான் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய திருப்புமுனை" என்று ஹர்மன்ப்ரீத் பாராட்டினார்.
இந்த வெற்றியை தனது சக வீராங்கனைகளுக்கும், தனக்கு ஆதரவளித்த மூத்த வீரர்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் கண்ணீருடன் கூறினார் ஷஃபாலி. "நாங்கள் வெற்றி பெற்றதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிலைமை கடினமாக இருந்தது, ஆனால் நான் நிதானமாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். என் மனம் தெளிவாக இருந்தது. மூத்த வீராங்கனைகள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து, எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தச் சொன்னார்கள். அந்தத் தெளிவுதான் எனக்குத் தேவைப்பட்டது" என்று ஷஃபாலி உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார்.
அணியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் வாய்ப்பு பெற்று, இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறிய ஷஃபாலி வர்மாவின் இந்தப் பயணம், விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும். "போட்டிக்கு முன்பு சச்சின் சாரைப் பார்த்ததுமே, என்னால் இன்று சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது," என்று புன்னகையுடன் கூறி முடித்தார் ஷஃபாலி.