மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு கடும் சவால் கொடுத்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாபிரிக்கா இருந்தது.
ஆனால் கடைசி ஐந்து ஓவர்கள் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்கள். இதனால் முதல்முறையாக ஐசிசி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா சீனியர் அணி தவறவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம், இந்த தோல்வியிலிருந்து தற்போது என்னால் மீள முடியாது. மனது வலிக்கின்றது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று பார்க்கவே எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும். இந்தத் தொடரில் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
எங்கள் அணி வீரர்கள் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நாங்கள் பெரிய அளவில் பயிற்சி செய்யவில்லை என்று நினைக்கின்றேன். இந்தியாவை ஒரு நல்ல இலக்கில் சுருட்டினோம் என்று தான் நான் நினைத்தேன். இந்தியா நிர்ணயித்த இலக்கு நிச்சயம் எட்டப்படும் தூரத்தில் தான் இருந்தது.
நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகவும் செயல்பட்டோம். இதனால் தான் போட்டி கடைசி கட்டத்திற்கு வரை வந்தது. இன்றைய ஆட்டம் கிரிக்கெட்டுக்கு நிச்சயம் ஒரு நல்ல நாளாக இருந்திருக்கும். இந்த தொடரில் நாங்கள் பல்வேறு போட்டிகளில் கடைசி பந்து வரை சென்று தான் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்த தொடர் முழுவதும் நாங்கள் எளிதாக எந்த வெற்றியும் பெறவில்லை. ஒவ்வொன்றுக்கும் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. மேலும் இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு வெற்றி இலக்கை துரத்த வேண்டும் என்று அழுத்தம் இருந்தது. குறிப்பாக கடைசி கட்டத்தில் நாங்கள் தடுமாறி விட்டோம். கடைசி சில ஓவர்களில் பேட்டிங்கில் சுதாரிக்கவில்லை.
இதனால் ஆட்டம் அப்படியே தலைக்கீழ் மாற்றி விட்டது. எனினும் நாங்கள் இறுதி போட்டியில் கடும் சவால்களை அளித்ததன் மூலம் நாங்களும் பைனலில் நன்றாக விளையாடுவோம் என்பதை நிரூபித்து இருக்கிறோம். நிச்சயமாக இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால் எங்களால் முடியவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த தொடர் எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் எங்கு சென்றாலும் கடும் சவால்களை கொடுப்பார் என்பதை மீண்டும் நாங்கள் நிரூபித்து இருக்கின்றோம். சண்டை போடாமல் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறோம். இந்த தொடரில் இருந்து எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. இதை நாங்கள் இனிவரும் காலங்களில் சிறப்பாக பயன்படுத்துவோம். நிச்சயம் இது தொடரில் இறுதிப் போட்டி வரை வந்ததே எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம்தான் என்றும் எய்டன் மார்க்கரம் கூறியுள்ளார்.