டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த நான்கு வாரமாக பொழுதுபோக்கை கொடுத்த இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் தோல்வியே தழுவாத இரண்டு அணிகள் பைனலில் மோதுகின்றனர்.
இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி முக்கிய போட்டிகளில் மண்ணை கவ்வும் என்பது உலகம் அறிந்த வரலாறு. தென்னாப்பிரிக்காவை போல் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியும் முக்கிய ஆட்டங்களில் தோல்வியை தழுவுகிறது.

இதனால் இன்றைய நாள் முடிவில் ஏதேனும் ஒரு அணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் செம பார்மில் இருக்கிறார்கள். அந்த அணியின் பலமே பௌலிங் ஆக தான் இருக்கின்றது. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும்.
சுழற் பந்துவீச்சாளர்கள் என அந்த அணி வெற்றி நடை போட்டு வருகிறது. எனினும் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அந்த அணியின் முக்கிய வீரர்கள் தங்களுடைய பெரிய ஆட்டத்தை ஆடவில்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
அதுவே இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுலுமே சிறப்பாகவே செயல்படுகிறது. விராட் கோலி, சிவம் துபே போன்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருவது ஒரு மைனஸ் ஆக பார்க்கப்பட்டாலும் மற்ற வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். காகித அளவில் ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்காவை விட இந்தியா தான் சிறப்பாக செயல்படுகிறது.
இதனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. டாஸ் 7.30 மணிக்கு போடப்படும். இந்த போட்டியை தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2 ஆகியவற்றில் ஆங்கிலத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழிலும் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்க வேண்டுமென்றால் மொபைலில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்-இல் இலவசமாக கண்டு களிக்கலாம்.