மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் மீது அணியில் உள்ள சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விரக்தியில் இருப்பதால் தற்போது அணியில் நிலையற்ற தன்மை நீடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இதனால் கம்பீர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கம்பீர் இந்திய அணியில் செய்யும் நடவடிக்கை சில வீரர்களுக்கு பிடிக்கவில்லை. அவருடைய மாற்றங்கள் முடிவுகள் அனைத்தும் தவறாக இருப்பதாகவும் வீரர்களுக்கு மனதளவில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதாகவும் கோலி, ரோஹித் சர்மா நினைக்கிறார்கள்.

அதேசமயம் கம்பீர், கோலி மற்றும் ரோகித் சர்மாவை அணியில் இருந்து நீக்கிவிட்டு முழுக்க முழுக்க தனது பேச்சைக் கேட்கும் இளம் வீரர்களை வைத்துக் கொள்ள காய் நகர்த்தி வருகிறார். இதற்காக ரோஹித், கோலிக்கு அவர் விரித்த வலையை இருவருமே தங்களது பேட் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
விராட் கோலி, ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோருக்கு இடையே உறவு சரியாக இல்லை என்பது தெள்ளத் தெளிவாக ரசிகர்களுக்கும் தெரிகிறது. இதன் காரணமாக ரசிகர்களும் கம்பீருக்கு எதிரான குரல்களை எழுப்பி வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட் அணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிசிசிஐ அஞ்சுகிறது.
இதனால் கம்பீரிடம் வீரர்கள் மத்தியில் நல்ல உறவை ஏற்படுத்துங்கள். வீரர்கள் தங்களை மதிக்கவில்லை என்றால் எப்படி நீங்கள் அணியை வழிநடத்துவீர்கள் சுமூகமான உறவை கடைப்பிடிப்பதை உறுதி செய்யுங்கள் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
இதனால் பிப்ரவரி மார்ச் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தான் கம்பீருக்கு இறுதியாக இருக்கும் என தெரிகிறது. அந்த தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்றால் கம்பீரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும். எந்த ஒரு பிரச்சனையும் வராது ஒருவேளை இந்தியா அந்த தொடரில் தோல்வியை தழுவினால், கம்பீர் உடனடியாக பதவியை விட்டு நீக்கப்படலாம் என தெரிகிறது.