சென்சுரியன்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தது பற்றி இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முதல் செஷனில் விக்கெட் கொடுக்காமல் விளையாடினர்.

ஆனால் இரண்டாவது செஷன் தொடக்கத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், விராட் கோலி 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த அஸ்வின் 8 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் - தாக்கூர் கூட்டணி இணைந்து அதிரடியாக சில ரன்களை விளாசியது. இதன்பின் டெய்லண்டர்களுடன் இணைந்து கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.
முதல் நாளில் மழை காரணமாக 59 ஓவர்களிலேயே ஆட்டம் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் விராட் கோலி போதுமான பயிற்சி மேற்கொள்ளாததே அவரால் நல்ல ஸ்கோரை அடிக்க முடியாததற்கு காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விக்ரம் ரத்தோர், விராட் கோலி 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை அவருக்கு அதிக பயிற்சி தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் குறைந்த நாட்கள் பயிற்சி செய்திருந்தாலும் பிரச்சனையில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து ரோகித் சர்மா புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்தது குறித்த கேள்விக்கு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புல் ஷாட் மூலமாகவே அதிக ரன்களை குவித்துள்ளார். அதனால் அவரின் சிறந்த ஷாட்டாக புல் ஷாட் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். அந்த ஷாட் மூலம் சில நேரங்களில் அதிக ரன்களை விளாசுவார். சில நேரம் அதே ஷாட் மூலமாக ஆட்டமிழப்பார். ரோகித் சர்மா புல் ஷாட் மூலம் சிக்ஸ் அடிக்கும் போது, அவர் தான் புல் ஷாட் புலி என்று கொண்டாடுவார்கள். அவர் மீது இந்திய அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.