மும்பை: இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கிடைத்தது போல் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே கிடையாது என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த வெற்றி ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. கேப் டவுன் அமைக்கப்பட்ட பேட்டிங்கிற்கு சாதகமில்லாத பிட்சிலும் பவுலர்கள் மூலமாக இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலமாக கேப் டவுன் மைதானத்தில் இந்திய அணி முதல்முறையாக வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளரான சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருமே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகியதால், இவர்கள் இருவரின் மீதும் அதிக சுமை இருந்தது.
ஏனென்றால் 10 மாதங்கள் ஓய்வுக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் பும்ரா திரும்பியதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பும்ரா மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா மண்ணில் 3வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் பணம் அதிக கிடைக்கும் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் பும்ரா. இதற்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பெரிய தூதுவர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
ஒவ்வொரு நாடுகளுக்கும் பும்ராவை ஒரு பவுலர் கிடைத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் உடல்மொழிக்கு நான் ரசிகனாகவே மாறிவிட்டேன். அதிலும் காயத்திற்கு பின் விளையாடும் முதல் டெஸ்ட் தொடரிலேயே தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கு பும்ராவின் செயல்பாடுகள் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.