கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்திய அணி சரிந்த நிலையில், இலங்கை அணி 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி 189 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 153 ரன்களை எடுத்தது.

இதனால் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் வெறும் 93 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட, இந்த டெஸ்ட் தொடர் சமனில் மட்டுமே முடியும்.
இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிரா என்று 52 புள்ளிகளுடனும், 54.17 வெற்றி சதவிகிதத்துடனும் இருக்கிறது.
வழக்கம் போல் முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகளில் விளையாடி 3லும் வென்று டாப்பில் உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 66.67 சதவிகித வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, ஒரு டிராவுடன் 66.67 சதவிகித வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது.
இதையடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும், இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும், நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும், இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் வென்றால் மட்டுமே, இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்தும் சிந்திக்கவே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.