டாஸ் முடிவு
இந்தப் போட்டியில் முதல் நாள் தவிர்த்து மற்ற நாட்களில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதனால் முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமான சூழல் நிலவும் என்ற நிலையில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தமிழக வீரர் அறிமுகம்
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் செனுரான் முத்துசாமி அறிமுகம் ஆனார். அவர் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆவார். தென்னாப்பிரிக்கா அரிதிலும், அரிதாக மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.
இந்தியா திணறல்
துவக்கத்தில் ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால் துவக்க ஜோடி தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் ரபாடா, பிலாண்டர் பந்துவீச்சை சமாளிக்க திணறியது. ஆனால், அது சில ஓவர்கள் வரை மட்டுமே.
ரோஹித் - மாயங்க் ஆதிக்கம்
ஒரு கட்டத்துக்குப் பின் ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸ் என விரட்ட ஆரம்பித்தார். உணவு இடைவேளைக்கு முன்பே ரோஹித் அரைசதம் கடந்தார். சுழற் பந்துவீச்சாளர்களை குறி வைத்து தாக்கினார்.
ரோஹித் சதம்
தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் டேனி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பிய ரோஹித் சுமார் 3 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.
எழுந்து நின்ற அணி
துவக்க வீரராக தான் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ரோஹித் சர்மாவை, கேப்டன் கோலி உட்பட ஒட்டுமொத்த அணியும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். ரோஹித் 5 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.
மாயங்க் அரைசதம்
மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்து, முதல் நாள் முடிவில் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார். தன் முதல் சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். முதல் நாள் போட்டியில் ரோஹித் - மாயங்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்ததுடன், ஏழு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினர்.
ஒரு விக்கெட் கூட இல்லை
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் நிலை தான் படுமோசம். ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் திணறினர். ரபாடா, பிலாண்டர் என இரு திறன் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்திய ஆடுகளத்தில் அவர்களால் செயல்பட முடியவில்லை.
சுழற் பந்துவீச்சாளர்கள்
மற்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்களில் கேஷவ் மகாராஜ் குறைவாக ரன்கள் கொடுத்தார். டேனி மற்றும் முத்துசாமி பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரோஹித் - மாயங்க் ஜோடி.
மழையால் தடை
59.1 ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து இருந்த போது கருமேகங்களால் வெளிச்சமின்மை ஏற்பட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மழை பெய்தது. நீண்ட நேரம் மழை நிற்காமல் பெய்த நிலையில், முதல் நாள் போட்டியை முடித்துக் கொண்டனர் அம்பயர்கள். இரண்டாம் நாள் போட்டி காலை 9.20க்கு துவங்கும் என அறிவித்தனர்.