மும்பை: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்திய இளம் நட்சத்திர வீரராக உருவாகி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். ஏற்கனவே இந்திய அணிக்காக டி20, ஒருநாள் அணிகளில் விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி அனைத்து வடிவங்களுக்கான கிரிக்கெட் அணியிலும் ருதுராஜ் கெய்க்வாட் தனது இடத்தை உறுதி செய்வார் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை விளாசி அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். 5 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 223 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலம் இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்களை விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதன் பலனாக ருதுராஜ் கெய்க்வாட் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்ததோடு 763 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் நம்பர் 1 இடத்தில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீடிக்கிறார்.
இவர்கள் இருவர் மட்டுமே இந்திய அணி சார்பாக டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 இடங்களில் உள்ளனர். இந்திய அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட், கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இனி இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக ருதுராஜ் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இருவரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.