மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலி என்ற பேட்ஸ்மேனை விடவும் ரோகித் சர்மா என்ற கேப்டன் மிகவும் முக்கியம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளதால், அனைத்து நாடுகளிலும் அதற்கேற்ப தயாராகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் மீண்டும் அதிக நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 20 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதனால் 20 நாடுகளும் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கும், சூப்பர் 8 சுற்று 2 குரூப்-களாக பிரிக்கப்பட்டு அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வகையில் டி20 உலகக்கோஒப்பை தொடர் நடக்கவுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கு கடந்த ஆண்டு முதலே தயாராகி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி உருவாக்கப்பட்டு விளையாடி வருகின்றன. ஆனால் திடீரென ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால், இந்திய அணிக்கு யார் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் மீண்டும் டி20 அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கு விராட் கோலி என்ற பேட்ஸ்மேனை விடவும், ரோகித் சர்மா என்ற கேப்டன் அதிகம் தேவையாக இருக்கிறார்.
அவரின் கேப்டன்சி திறமைக்காகவே ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும். அண்மையில் முடிந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதேபோல் பேட்ஸ்மேனாகவும் மிரட்டலாக விளையாடினார். அதுதான் அடுத்த ஐசிசி தொடரில் இந்திய அணிக்கு தேவையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.