அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி புதிய உலகக்கோப்பை சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகத் திகழ்ந்து வந்தார். இந்தப் போட்டியில் அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரே போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா என இருவருமே அஸ்வினின் சாதனையை எட்டினர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பையில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்தினார். இதன் மூலம் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி, டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
அதேபோல், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 32 விக்கெட்டுகளுடன் அஸ்வின் சாதனையைச் சமன் செய்துள்ளார். அர்ஷ்தீப் சிங் அஸ்வின் சாதனையை முறியடிக்கவில்லை என்றாலும் அதை எட்டி சமன் செய்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா - 33 விக்கெட்டுகள்*
அர்ஷ்தீப் சிங் - 32 விக்கெட்டுகள்*
ரவிச்சந்திரன் அஸ்வின் - 32 விக்கெட்டுகள்
ஹர்திக் பாண்டியா - 29 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா - 22 விக்கெட்டுகள்
இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தனது நான்கு ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை (டி காக், ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ்) வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 3.75 மட்டுமே. அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 47 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 45 ரன்களையும் வாரி வழங்கினர். சிவம் துபே 2 ஓவரில் 32 ரன்கள் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் மார்க்ரம் 4 ரன்னிலும், குயின்டன் டி காக் 6 ரன்னிலும் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் அனுபவ வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் இந்திய பந்துவீச்சைச் சிதறடித்தனர்.
பிரேவிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் தூணாக நின்ற டேவிட் மில்லர் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தார். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்கா 187 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.