மும்பை: இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு ஒரு நாள் தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதியும் அதன் பின் டிசம்பர் 9ஆம் தேதி டி20 தொடரும் தொடங்க உள்ளது.
இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஒரு நாள் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் காயம் காரணமாக இடம்பெற மாட்டார்.

அவருக்கு பதில் ருதுராஜ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மையில் தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டிகளில் ருதுராஜ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
இதேபோன்று இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லும் ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதில் பண்ட் இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பலாம். இதேபோன்று நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
எனினும் அவர் டி20 போட்டிக்கு திரும்புவார். இதேபோன்று இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார். இன்னும் அவர் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் கில் முழு உடல் தகுதியை எட்டினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார். இதனால் அவருக்கு பதில் பண்ட் களமிறங்க கூடும். இதேபோன்று அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக களமிறங்க ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் பண்ட்க்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இதைத் தவிர ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் எந்த இந்திய அணி களமிறங்கியதோ அதே தான் இந்த தென்னாப்பிரிக்கா தொடரிலும் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.