கொல்கத்தா: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி முதலில் 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பும்ரா வழக்கம் போல் தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம், ரியான் ரிக்கல்டன், நடுவரிசையில் டோனி டிஸோர்சி மற்றும் கீழ் வரிசையில் சைமன் ஹார்மர் மற்றும் கேசவ் மகராஜ் என ஐந்து விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

வெறும் 14 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பும்ரா ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய ஆசிய பவுலர் என்ற பெருமையை பும்ரா படைத்திருக்கிறார்.இதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசீம் அக்ரம் 12 முறை 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், தற்போது பும்ரா அவரை முறியடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 11 முறையுடன் கபில்தேவும் நான்காவது இடத்தில் ஒன்பது முறையுடன் வக்கார் யூனிசும், ஐந்தாவது இடத்தில் தலா எட்டு முறையுடன் இம்ரான் கான், ஜாகிர் கான் மற்றும் சோயிப் அக்தர் உள்ளனர்.இது போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் பும்ரா படைத்திருக்கிறார்.
பும்ரா வெறும் 76 இன்னிங்சில் 13 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 78 இன்னிங்ஸில் 11 முறையும், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 95 இன்னிங்ஸில் 10 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதே போன்று பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நாளிலிருந்து கணக்கிட்டால் பும்ரா இதுவரை 16 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சிராஜ் வெறும் ஐந்து முறை தான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.