மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் சிறந்த பந்து ஒன்றை வீசி தென்ஆப்பிரிக்கா வீரர் ரீசா ஹென்ரிக்சை பும்ரா ஆட்டம் இழக்க செய்திருக்கிறார். இந்த தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் பகுதியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. பொதுவாக இறுதிப் போட்டி போன்ற ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்றால் ஏதாவது ஒரு மேஜிக்கை ஏதேனும் ஒரு வீரர் செய்ய வேண்டும்.

அது பேட்டிங்காக இருந்தாலும் சரி பௌலிங் ஆக இருந்தாலும் சரி, பில்டிங் ஆக இருந்தாலும் சரி மேஜிக் நிகழ்ந்தால் மட்டுமே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்து இருந்தது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன்களை எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்தினால் தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த சூழலில் முதல் ஓவரில் ஆர்ஸ்தீப் சிங் ஆறு ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனை அடுத்து பும்ரா கையில் பந்து சென்றது. வழக்கம் போல் பும்ரா அனல் பறக்க பந்து வீசினார். இதனை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர் ரிசா ஹென்றிக்ஸ் தடுமாறினார். குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மூன்றாவது பந்தை பும்ரா வீசினார்.
அந்த பந்தை தடுப்பதற்காக ஹென்றிக்ஸ் பேட்டை தயார்படுத்தினார். ஆனால் அதற்குள் பந்து இன்டிகேட்டர் போடாமலேயே திரும்பி பேட்டை மிஸ் செய்து ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. இதனால் தான் எப்படி ஆட்டம் இழந்தோம் என்று புரியாமல் சில வினாடிகள் ஹென்றிக்ஸ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. இதைப் போன்று ஆர்ஸ்தீப் சிங் வீசிய பந்தை தென்ஆப்பிரிக்கா கேப்டன் ஏய்டன் மார்க்ரம் அடிக்க முயன்ற போது அது ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனது. இதனால் தென்னாபிரிக்க அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகள் இழந்தது.