லக்னோ: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நான்காவது டி20 போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது போட்டியின் போது அவர் விளையாடவில்லை. இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. குடும்பச் சூழல் காரணமாக பும்ரா பாதியிலேயே வீட்டுக்குச் சென்றதாக அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது.
நாளை (புதன்கிழமை) லக்னோவில் 4-வது டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், பும்ராவின் நிலை என்ன? மாற்று ஏற்பாடு என்னவென்று பார்ப்போம்.

தர்மசாலாவில் நடந்த 3-வது டி20 போட்டியில் பும்ரா விளையாடவில்லை. டாஸ் போடும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ், "தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வீட்டுக்குச் சென்றுவிட்டார்" என்று மட்டுமே கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விளக்கமளித்துள்ளார். "பும்ராவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்துடன் இருக்கவே அவர் அவசரமாகத் திரும்பியுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அந்த அதிகாரி பதிலளிக்கையில், "சூழ்நிலை சரியானால், அவர் 4-வது போட்டிக்கு அல்லது அகமதாபாத்தில் நடக்கும் 5-வது போட்டிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது குடும்ப உறுப்பினர் குணமடைவதுதான் முதல் முக்கியத்துவம். எனவே அவர் எப்போது இணைவார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
இதனால் நான்காவது டி20 போட்டியில் பும்ரா ஆடுவது சந்தேகம் என்றே தெரிகிறது. அவர் இல்லாத பட்சத்தில், கடந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய ஹர்ஷித் ராணாவே அணியில் தொடருவார்.
மற்றொரு சோக செய்தியாக, ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் உடல்நலக்குறைவு காரணமாகத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். தர்மசாலா போட்டியிலும் அவர் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக பெங்கால் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு பின் இந்திய அணிக்கு சுமார் மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.