லக்னோ: களத்தில் எவ்வளவு பதற்றமான சூழல் இருந்தாலும் அமைதியாகக் காணப்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செய்த செயலால் நிதானம் இழந்து கோபப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எல்லை மீறிய ரசிகரின் செல்போனை பும்ரா பிடுங்கி வீசியது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
ஜஸ்பிரித் பும்ரா விமான நிலையத்தில் செக்-இன் (Check-in) செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர், பும்ராவிடம் அனுமதி கேட்காமலேயே அவருடன் செல்ஃபி வீடியோ எடுக்க முயற்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்த ரசிகரை வீடியோ எடுக்க வேண்டாம் என்று பும்ரா எச்சரித்துள்ளார். ஆனால் அந்த ரசிகர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டே பும்ராவைத் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த பும்ரா, திடீரென கோபமடைந்து அந்த ரசிகரின் கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி தூக்கி வீசினார்.

அந்த வீடியோவில் ரசிகருக்கும் பும்ராவுக்கும் இடையே நடந்த உரையாடல் இதுதான்:
ரசிகர்: "சார், நான் உங்க கூடவே தான் வருவேன்."
பும்ரா: "போன் கீழே விழுந்து உடைந்தால் என்னைக் கேட்கக்கூடாது."
ரசிகர்: "பரவாயில்லை சார்."
பும்ரா: "கூல்."
இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நொடியே பும்ரா அந்தப் போனைப் பிடுங்கி அப்புறப்படுத்தினார். அனுமதியின்றி வீடியோ எடுத்ததாலேயே பும்ரா இந்த அளவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தர்மசாலாவில் நடந்த 3-வது போட்டியில் விளையாடவில்லை. லக்னோவில் நடந்த 4-வது போட்டி பனி மூட்டத்தால் ரத்தானது.
இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கப்போகும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (டிசம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணான அகமதாபாத்தில் பும்ரா மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.