கட்டாக்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தாலும், அந்த விக்கெட் வீழ்த்தப்பட்ட விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா வீசிய அந்த பந்து 'நோ-பால்' (No-ball) போலத் தெரிந்தும், மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது குறித்து வர்ணனையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கட்டாக்கில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். ஆனால், இந்த சாதனை சர்ச்சையுடனே நிகழ்ந்துள்ளது.

போட்டியின் 11-வது ஓவரின் இரண்டாவது பந்தை பும்ரா வீசினார். வேகம் மற்றும் பவுன்ஸுடன் வந்த அந்தப் பந்தை, தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ் சரியாகக் கணிக்காமல் தூக்கி அடித்தார். கவர் திசையில் நின்றிருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை எளிதாகப் பிடித்தார்.
பிரேவிஸ் பெவிலியன் திரும்பத் தொடங்கியபோது, கள நடுவர்கள் பும்ரா கிரீஸைத் தாண்டி காலை வைத்தாரா என்பதைச் சோதிக்க மூன்றாவது நடுவரிடம் கேட்டனர். ரீப்ளேயைப் பார்த்த மூன்றாவது நடுவர், பும்ராவின் காலின் ஒரு பகுதி கோட்டுக்கு உள்ளே இருப்பதாகக் கூறி, அது சரியான பந்து என்றும், பிரேவிஸ் அவுட் என்றும் அறிவித்தார்.
ஆனால், டிவி திரையில் காட்டப்பட்ட ரீப்ளேயில், பும்ராவின் காலின் எந்தப் பகுதியும் கோட்டுக்கு பின்னால் இருப்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் கோட்டைத் தாண்டி காலை வைத்தது போலவே இருந்தது. இதைக் கண்ட முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பாமி ம்பங்வா ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
"என்னால் கோட்டுக்கு பின்னால் எதையும் பார்க்க முடியவில்லை. அப்படியென்றால் அவர் கோட்டைத் தாண்டிவிட்டார் என்றுதானே அர்த்தம்? இது எப்படி அவுட் ஆகும்?" என்று வர்ணனையின் போது ம்பங்வா கேள்வி எழுப்பினார்.
சிறிது நேரம் கழித்து பக்கவாட்டு கோணத்தில் ரீப்ளே காட்டப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு ஃபீல்டர் குறுக்கே நின்றதால், பும்ராவின் கால் எங்கே இருந்தது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து பேசிய மற்றொரு வர்ணனையாளர் தீப் தாஸ்குப்தா, "இதுபோன்ற தெளிவற்ற சூழலில், சந்தேகத்தின் பலன் பந்துவீச்சாளருக்கே வழங்கப்படும்" என்று விளக்கினார். இருப்பினும், இது நோ-பால் தான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, இந்த விக்கெட் மூலம் பும்ரா ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். சர்வதேச டி20-யில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை செய்தார், முதல் இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருக்கிறார்.
மேலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மற்றும் ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை பும்ரா படைத்துள்ளார். உலக அளவில் மலிங்கா, சவுதி, ஷகிப் அல் ஹசன், அப்ரிடி ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.