விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிய கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மைதானத்தில் கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. விராட் கோலி கூறிய ஆலோசனையை கேப்டன் கே.எல்.ராகுல் நிராகரித்த விதமும், அதன்பின் ரோஹித் சர்மாவைப் பார்த்து சிரித்ததும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியின் 45-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. குல்தீப் யாதவ் பந்துவீசிக் கொண்டிருந்தார். எதிரணியின் பின்வரிசை வீரர்கள் களத்தில் இருந்தனர். அப்போது விராட் கோலி கேப்டன் ராகுலிடம் வந்து, "இன்னொரு ஸ்லிப் ஃபீல்டரை வைத்தால் விக்கெட் விழும்" என்பது போல ஆலோசனை கூறினார்.

தொடர் தொடங்குவதற்கு முன், "சீனியர்களின் ஆலோசனை எனக்கு உதவும்" என்று ராகுல் கூறியிருந்தார். ஆனால், களத்தில் ஒரு கேப்டனாகத் தனது உள்ளுணர்வுக்கே முன்னுரிமை அளித்தார். கோலி சொன்னதைக் கேட்ட ராகுல், அதை ஏற்க மறுத்துவிட்டார். மாறாக, விராட் கோலியைப் பார்த்து கையை அசைத்து, "முதல்ல அங்க போய் நில்லுங்க" என்பது போல சைகை காட்டி, அவரை ஃபீல்டிங் நிற்க வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்.
கோலியை அப்படி அனுப்பிய உடனேயே, ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவைப் பார்த்து கே.எல்.ராகுல் ஒரு நையாண்டியாக சிரித்தார். ரோஹித்தும் அதைப் பார்த்துச் சிரித்தார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், "என்னப்பா இது.. முன்னாள் கேப்டன் கோலிக்கே இந்த நிலைமையா? ராகுல் கேப்டன் ஆனதும் கெத்து காட்டுகிறார்" என்று சமூக வலைத்தளங்களில் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுப்மன் கில் இல்லாததால் கேப்டனாகப் பொறுப்பேற்ற ராகுல், இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தினார். குறிப்பாக 21 போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவை 'டாஸ்' வெல்ல வைத்த பெருமையும் அவரையே சேரும்.
போட்டிக்குப் பிறகு பேசிய ராகுல், "இந்தத் தொடரில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நாங்கள் அழுத்தத்தைக் கையாண்ட விதம் தான். தென்னாப்பிரிக்க வீரர்கள் நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் பந்துவீச்சாளர்கள் பதற்றப்படாமல் சிறப்பாகச் செயல்பட்டனர்" என்று பெருமிதம் தெரிவித்தார்.