ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தோல்வி தமக்கு மன வலியை எதுவும் ஏற்படுத்தவில்லை என்று இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ராகுல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் இந்த தோல்வி ஒன்றும் எனக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் பந்து வீசும் போது எவ்வளவு பணிபொழிவு இருக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

இதனால் பந்து வீசுவது எவ்வளவு கடினம் என்றும் எங்களுக்கு தெரியும். நடுவர்கள் இந்த போட்டியில் நன்றாக நடந்து கொண்டார்கள். பந்து வீசுவது கடினம் என தெரிந்து சில முறை பந்துகளை அவர்கள் மாற்றினார்கள். எனினும் இந்தப் போட்டியில் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து இரண்டு டாஸ்களை நான் இந்த தொடரில் இழந்துவிட்டேன். சில விஷயங்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். 350 ரன்களுக்கு மேல் எடுப்பது எப்போதுமே ஒரு நல்ல இலக்கு தான். எப்போதுமே கூடுதலாக ஒரு 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் பேசி இருந்தோம்.
இதன் மூலம் பவுலர்களுக்கு கூடுதலான இலக்கை தற்காத்துக் கொள்ள நாம் வழியை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஈரமான பந்துகளை வைத்து பந்து வீசுவது மிகவும் கடினமான விஷயம். எனினும் எங்கள் பவுலர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். சில விஷயங்களில் நாங்கள் எங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் பில்டிங்கில் சில ரன்களை கோட்டை விட்டோம். அந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பில்டிங்கில் இன்னும் கூர்மையாக இருந்து ஒரு 20 ,25 ரன்களை நாங்கள் தடுத்திருக்க வேண்டும். ருதுராஜ் இந்த போட்டியில் சிறப்பாக சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டார். விராட் கோலி இதே போல் அபாரமாக 53 முறை விளையாடிவிட்டார்.
இந்த போட்டியில் என்ன பணியை செய்ய வேண்டும் என்று விராட் கோலிக்கு நன்றாக தெரியும். அதை நாங்கள் பார்த்து பழகிவிட்டோம். ஆனால் ருதுராஜ் இன்று பேட்டிங் செய்த விதம் உண்மையிலே சிறப்பாக இருந்தது. சுழற் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை சேர்த்தார். ஐம்பது ரன்களை கடந்த உடன் அவர் பேட்டிங் ரன்குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார்.
இதன் மூலம் எங்களுக்கு கூடுதலாக ஒரு 20 ரன்கள் கிடைத்தது. கீழ் வரிசை வீரர்கள் இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் கவனம் செலுத்தி பவுண்டரிகளை கொஞ்சம் எடுத்துக் கொடுக்க வேண்டும் .இதன் மூலம் இன்னும் கூடுதலாக ஒரு 20 ரன்கள் கிடைத்தால், நாங்கள் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்போம். இந்தப் போட்டியில் தான் முதல் முறையாக நான் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களமிறங்க திட்டமிட்டு ஐந்தாவது இடத்திலே விளையாட வந்தேன்.
ஏனென்றால் விராட், ருத்ராஜ் ஆகியோர் நல்ல ஒரு ரன்குவிக்கும் வேகத்தை உருவாக்கி விட்டு சென்றார்கள். எனவே இந்த நேரத்தில் நான் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என கம்பீரும், நானும் முடிவெடுத்தோம். அதனால் தான் நான் ஐந்தாவது வீரராக களமிறங்கினேன். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது என்று ராகுல் கூறினார்.