ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியைக் கைப்பற்றிய பிறகு, கேப்டன் கே.எல்.ராகுல் தனது மனநிலையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். "வெற்றி இலக்கை அவர்கள் நெருங்கியபோது பயம் இல்லை என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும்" என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ராஞ்சியில் நடந்த போட்டியில் 350 ரன்களை டிபெண்ட் செய்த இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஏற்ற ராகுல், பேட்டிங்கில் 60 ரன்கள் எடுத்ததோடு, கேப்டன்சியிலும் முத்திரை பதித்தார்.

தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது. வெற்றிக்குப் பிறகு பேசிய ராகுலிடம், சேஸிங்கின் போது பதற்றம் இருந்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "பதற்றம் இல்லை என்று நான் சொன்னால், அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் ஆடுகிறோம், மீண்டும் நாட்டுக்காக கேப்டன் பொறுப்பேற்றுள்ளேன் என்பதால் என் மீது எனக்கே எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆடுகளத்தில் ஒருவித அமைதி நிலவினாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களை எல்லைக்கே தள்ளினார்கள். அவர்கள் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்கள். அது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது" என்றார்.
மீண்டும் அணிக்குத் திரும்பிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்துப் பேசிய ராகுல், "அவர்கள் இருவரும் அப்படி ஆடுவதைப் பார்ப்பதே எப்போதுமே ஜாலியாக இருக்கும். அவர்கள் ஆடிய விதம், அந்த சுதந்திரம்... இதுதான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வருகிறார்கள். நான் நீண்ட காலமாக இதைப் பார்த்து வருகிறேன். அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது" என்று சீனியர்களைப் புகழ்ந்தார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவைப் பாராட்டிய ராகுல், "ஹர்ஷித் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தபோதே அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்று எனக்குத் தெரியும். இந்திய அணி நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த வீரர் இவர்தான். அவர் இன்னும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், அவரிடம் நிறையத் திறமை உள்ளது" என்று நம்பிக்கைத் தெரிவித்தார் ராகுல்.
தொடர்ந்து தனது பங்கு குறித்துப் பேசிய அவர், "கடந்த 2-3 தொடர்களாக எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் செய்து வருகிறேன். அணியின் வெற்றிக்காக ஆடுவது எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்லது" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார் ராகுல்.