டர்பன்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பவுலிங்கை போல் இன்னொருவர் கற்று கொள்வது அரிதான ஒன்று என்று இந்திய பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ப்ரே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதன் காரணமாக ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரருக்கான டாப் 3 வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முகமது ஷமி காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், கணுக்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்த பின்னரே விமானம் ஏறுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெஸ்ட் அணியில் இவருக்கான பேக் அப் வீரராக பிரசித் கிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ப்ரே பேசுகையில், முகமது ஷமி போன்ற பந்துவீச்சாளர் உருவாகுவதற்கு பயிற்சியாளர் தான் காரணம் என்று சொன்னால் அது பொய் தான். பந்தின் சீம் பகுதியை பிடித்து எந்த அசைவும் இல்லாமல் அதனை பிட்ச் செய்ய முகமது ஷமியால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் முடியும். இந்த திறமையை முகமது ஷமி சுயம்பாக கற்று கொண்டுள்ளார். அதற்காக அவர் ஏராளமான உழைப்பை கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு பந்தையும் மீண்டும் மீண்டும் சீம் பகுதியை பிடித்து இரு பக்கமும் திருப்ப கூடிய திறமையை கொண்ட வீரர்கள் அரிதானவர்கள். சில பவுலர்கள் சீம் பகுதியை பிடித்து வீசினாலும், பிட்சான பின்னரும் பந்து எந்த பக்கமும் திரும்பாமல் செல்லும். இவ்வளவு ஏன் பும்ராவும் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் மூலமாக தான் பந்தை இரு பக்கமும் திருப்புகிறார். இது ஒரு வகையான கலை என்று தான் சொல்ல வேண்டும். இந்த கலையை கற்று கொள்ள உழைப்பும், பயிற்சியும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.