கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கேப் டவுனில் களமிறங்கியுள்ளனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டிச.26ல் தொடங்கிய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றலாம். அதேபோல் கேப் டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. இதனால் கேப் டவுனில் இந்திய அணி வீரர்கள் புதிய வரலாறு படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்காக ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் மோசமான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இவர்கள் அனைவரும் உடனடியாக பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
அதிலும் ரோகித் சர்மா முதல் ஆளாக பயிற்சியில் ஈடுபட்டார். கேப் டவுன் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டான இன்று இந்திய அணி வீரர்கள் கேப் டவுனுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு தரையிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, மகள் சமைரா ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்தனர். அதேபோல் லண்டனில் இருந்த விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவும் 2 நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அந்த வகையில் புத்தாண்டை கொண்டாடவும் இந்திய வீரர்கள் தயாராக இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஜனவரி 3ல் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.