மும்பை: நடப்பாண்டில் நடைபெற்ற டி20 போட்டிகள் மூலம் இந்திய அணியில் அதிக ஊதியம் பெற்ற வீரர் யார் என்ற தகவல் வெளிவந்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ தரப்பில் ஒவ்வொரு போட்டிக்கு இந்திய அணி வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் இந்திய அணியில் டி20 கிரிக்கெட் மூலம் அதிக ஊதியத்தை பெற்ற வீரர் யார் என்ற தகவல் வெளி வந்துள்ளது.

இந்த பட்டியலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவோ, சூர்யகுமார் யாதவோ முதலிடத்தில் இல்லை. அதேபோல் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நடப்பாண்டில் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் இந்த பட்டியலில் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தான் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பாண்டில் மட்டும் இந்திய அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.57 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளார். அவருக்கு பின் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் 16 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.48 லட்சம் ஊதியாக பெற்றுள்ளார். இவருக்கு பின் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 13 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.39 லட்சம் ஊதியாக பெற்றுள்ளனர்.
அதேபோல் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரவி பிஷ்னாய் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 11 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.33 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளனர். மேலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தலா 10 போட்டிகளில் விளையாடி ரூ.30 லட்சம் ஊதியாக பெற்றுள்ளனர். நடப்பாண்டில் இந்திய அணி 20 போட்டிகளில் விளையாடி 14 வெற்றி, 6 தோல்வியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நாளை மறுநாள் களமிறங்கவுள்ளது. மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார். இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா சென்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.