ராய்ப்பூர்: இந்திய கிரிக்கெட் அணிக்குள் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிசிசிஐ ஒரு ரகசிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான பிரக்யான் ஓஜாவை சமாதானத் தூதுவராக பிசிசிஐ அனுப்பியுள்ள தகவல் கசிந்துள்ளது.

இன்று (புதன்கிழமை) ராய்ப்பூரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால், மைதானத்தில் நடக்கும் போட்டியை விட, டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் சம்பவங்கள் தான் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது முதல், கம்பீருக்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது, விராட் கோலி பயிற்சியாளர் கம்பீரை கண்டுகொள்ளாமல் சென்ற வீடியோவும், ரோஹித் சர்மா கம்பீரிடம் காரசாரமாக விவாதித்ததும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
இந்த விவகாரம் மேலும் பெரிதாகி வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, பிசிசிஐ சைலண்டாக ஒரு வேலையைச் செய்துள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினரான பிரக்யான் ஓஜாவை உடனடியாக ராஞ்சிக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து அவர் அணியுடனேயே ராய்ப்பூர் வந்துள்ளார்.
பிரக்யான் ஓஜாவின் முக்கிய பணியே, கம்பீருக்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவதுதான். இரு தரப்பிலும் உள்ள ஈகோ மோதல்களைக் குறைத்து, டிரெஸ்ஸிங் ரூம் சூழலை அமைதியாக வைத்திருக்கவே அவர் அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது ராய்ப்பூரில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ மீட்டிங் எதையும் திட்டமிடவில்லை என்றாலும், ஓஜா வீரர்களுடனும் பயிற்சியாளருடனும் தனித்தனியாகப் பேசி நிலைமையைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் வலைப்பயிற்சியின் போது விராட் கோலி, கம்பீர் நின்றிருந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்றது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது. அவர்கள் இருவரின் உறவுமுறை மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ராய்ப்பூரில் மற்றொரு முக்கிய நிகழ்வும் நடக்கவுள்ளது. பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா ராய்ப்பூர் வரவுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சியை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.
ஒருபக்கம் புதிய ஜெர்சி வெளியீட்டு விழா உற்சாகம் இருந்தாலும், மறுபக்கம் அணிக்குள் நிலவும் இந்தப் பனிப்போர் இந்திய அணியின் ஆட்டத்தைப் பாதிக்குமோ என்ற கவலை ரசிகர்களிடம் உள்ளது. சமாதானத் தூதுவராக வந்திருக்கும் பிரக்யான் ஓஜா, இந்தச் சண்டையை முடித்து வைப்பாரா?