மும்பை: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியாவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் உள்ளன. தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற கடந்த மூன்று இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

மறுபுறம், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டி கூட தோற்காமல் கோப்பையை வென்றது. இந்த தொடர் குறித்து பேசிய முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், ஒருநாள் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2023 டிசம்பரில் இரு அணிகளும் இருதரப்பு ஒருநாள் தொடரில் சந்தித்தன. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், 2022-ல் இந்தியாவில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்தியா, தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுப்பவர் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார் என்பது குறித்து டேல் ஸ்டெய்ன் மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் கணித்துள்ளனர்.
இதில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் என்று இருவரும் கணித்துள்ளனர். 30 வயதான குல்தீப் யாதவ், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான சாதனையை வைத்துள்ளார். 13 போட்டிகளில் 16.51 சராசரி மற்றும் 4.55 எக்கனாமியுடன் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியின் குயின்டன் டி காக் அதிக ரன்கள் அடித்து பட்டியலில் முதலிடம் பிடிப்பார் என்று ஸ்டெயின் கூறியுள்ளார். 32 வயதான டி காக், இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 20 போட்டிகளில் கிட்டத்தட்ட 54 சராசரியுடன் 91.58 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். பார்த்திவ் படேல் பொறுத்தவரை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என்று கணித்துள்ளார்.
ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்தார். இறுதி ஒருநாள் போட்டியில் 121 ரன்கள் எடுத்து மிரட்டினார். எனினும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 50 ஓவர் போட்டிகளில் ரோகித் சற்று தடுமாறியுள்ளார். 26 போட்டிகளில் 33.58 சராசரி மற்றும் 82.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.ஆனாலும், சொந்த மண்ணில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்துள்ளார். 94 போட்டிகளில் 57-க்கும் அதிகமான சராசரி மற்றும் 103.70 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.