மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இரண்டு தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை ஓரம் கட்ட நினைப்பவர்களுக்கும், அவர்களைச் சீண்டுபவர்களுக்கும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "அவர்கள் சும்மா இருக்கும்போதே விட்டுவிடுங்கள்.. அவர்கள் கோபப்பட்டால் யாரும் தாங்க மாட்டீர்கள்" என்று பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்தை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
சமீபகாலமாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் ரோஹித் மற்றும் கோலிக்கு சுமுகமான உறவு இல்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் ரவி சாஸ்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பேட்டியில் பேசிய ரவி சாஸ்திரி, தனது வழக்கமான பாணியில் அதிரடியாகப் பேசினார். "இவர்கள் இருவரும் (ரோஹித் மற்றும் கோலி) கிரிக்கெட்டின் தாத்தாக்கள். வெள்ளை பந்து கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். இவர்களிடம் தயவுசெய்து விளையாட்டு காட்டாதீர்கள்.
இவர்களுக்கு மட்டும் மூளை சூடாகி, சரியான பட்டனை அழுத்தினார்கள் என்றால், சுற்றியிருப்பவர்கள் அனைவரும் தெறித்து ஓட வேண்டியதுதான். யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது" என்று எச்சரித்துள்ளார்.
"யார் இவர்களிடம் விளையாட்டு காட்டுகிறார்கள்?" என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, "யாரெல்லாம் இவர்களைச் சீண்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தான்" என்று பெயரைக் குறிப்பிடாமல் பிசிசிஐ மற்றும் நிர்வாகத்தைச் சாடினார்.
சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ரோஹித் மற்றும் கோலியை ஓரங்கட்ட நினைப்பது, உங்கள் காலில் நீங்களே சுட்டுக் கொள்வதற்குச் சமம் என்பதையே சாஸ்திரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "அனுபவத்தை உங்களால் மார்க்கெட்டில் விலை கொடுத்து வாங்க முடியாது. ஒருவர் சேஸிங் செய்வதில் மன்னன் (கோலி), மற்றொருவர் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களை அடித்தவர் (ரோஹித்). இவர்களுக்கு மாற்று வீரர்கள் இப்போதைக்கு இல்லை" என்று கூறினார் ரவி சாஸ்திரி.
2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கு ரோஹித் மற்றும் கோலி தேவைதானா? என்ற விவாதம் நடந்து வருகிறது. மேலும், கம்பீருக்கும் இவர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ராஞ்சியில் கோலி கம்பீரை கண்டுகொள்ளாமல் சென்றது, ரோஹித் கம்பீரிடம் விவாதம் செய்தது போன்றவை இதை உறுதிப்படுத்தின.
ஆனால், ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் சதமடித்து, "எங்களை யாராலும் அசைக்க முடியாது" என்று ரோஹித் - கோலி ஜோடி நிரூபித்துள்ளது. தற்போது ரவி சாஸ்திரியும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, பிசிசிஐ-க்கு 'செக்' வைத்துள்ளார்.