அஸ்வின் அல்லது ஷர்துல்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ரோகித் சர்மா முடிவு என்ன?
சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் முழு பலத்துடன் முதல்முறையாக களமிறங்குகின்றன. அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரில் வென்றதில்லை.

இதனால் இந்திய அணி முதல்முறையாக வெற்றிபெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சென்சுரியன் ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தான் வேலை இருக்கும்.
அதேபோல் இந்திய அணியின் முகமது ஷமி காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியதில்லை.
அதேபோல் ரோகித் சர்மாவை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் அவரின் பேட்டிங் சராசரி 15.37 மட்டும் தான். அதேபோல் 3வது இடத்தில் சுப்மன் கில் களமிறங்குவார். இவரும் தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியதில்லை என்பதால், இவரிடமும் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து வழக்கம் போல் 4வது வீரராக விராட் கோலியும், 5வது இடத்தில் கேஎல் ராகுலும் களமிறங்குவார்கள்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 51.35ஆக உள்ளது. ஆனால் கேஎல் ராகுல் 2 முறை தென்னாப்பிரிக்காவில் விளையாடியும், பெரியளவில் சோபிக்கவில்லை. இவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். இதன்படி பார்த்தால், இந்திய அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க விராட் கோலி, ரோகித் சர்மாவை நம்பியே இருக்கும்.
அதேபோல் 7வது இடத்தில் ஜடேஜாவும், 8வது இடத்தில் ஷர்துல் தாக்கூரும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஜடேஜாவின் பேட்டிங அஸ்வினுக்கு வில்லனாக இருந்து வரும் சூழலில், கடந்த சுற்றுப்பயணத்தின் போது ஷர்துல் தாக்கூர் மரண மாஸ் செய்துள்ளதால், அவரையே இந்திய அணி களமிறக்கும். அதன்பின் பும்ரா, சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம். பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் இருவரில் முகேஷ் குமாரின் செயல்பாடுகளே அதிக திருப்தியளிப்பதால், ரோகித் சர்மா அவரையே பிளேயிங் லெவனில் சேர்ப்பார் என்று பார்க்கப்படுகிறது.
Story first published: Tuesday, December 26, 2023, 6:01 [IST]
Other articles published on Dec 26, 2023


Click it and Unblock the Notifications