கொல்கத்தா: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடந்தது. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சிஎஸ்கே அணியை விட்டு ஜடேஜா அதிகாரப்பூர்வமாக சென்று விட்டதாக அறிவிப்பு வெளியானது.

இது ரசிகர்களை சோகமடைய செய்தது. அதே நேரத்தில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது களத்திற்கு வந்த ஜடேஜா ரசிகர்களின் கவலையை மறக்க வைக்கும் விதமாக ஒரு மகத்தான சாதனையை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா தற்போது 4000 ரன்களை கடந்து இருக்கிறார்.
இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் பேட்டிங்கில் 4000 ரன்கள், பந்துவீச்சில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5248 ரன்களும், 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதேபோன்று நியூசிலாந்து வீரர் டேனியல் விட்டோரி 113 போட்டிகளில் விளையாடி 4531 ரன்களும், 362 விக்கெட்டுகளையும் வீழ்த்திருக்கிறார்.இதைப் போன்று இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் 102 போட்டிகளில் விளையாடி 5200 ரன்களையும், 383 விக்கெட்டுகளையும் வீழ்த்திருக்கிறார்.
தற்போது இந்த பட்டியலில் ஜடேஜா 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளும், நான்காயிரம் ரன்களையும் கடந்துள்ளார். ஜடேஜா இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடினால் கபில்தேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.