துவாரகா: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் மாநில அமைச்சருமான ரிவாபா ஜடேஜா பேசிய பேச்சு, தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது கணவரின் ஒழுக்கத்தைப் புகழ்ந்து பேசுகிறேன் என்ற பெயரில், இந்திய அணியின் மற்ற வீரர்கள் மீது அவர் வைத்த மறைமுகக் குற்றச்சாட்டு சர்ச்சையாகியுள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ரிவாபா ஜடேஜா கலந்து கொண்டார். அப்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்கம் குறித்து அவர் பேசினார்.

மேடையில் பேசிய ரிவாபா, "எனது கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் விளையாடுவதற்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா எனப் பல வெளிநாடுகளுக்குச் செல்கிறார். 24 மணி நேரமும் அவர் உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறார்.
ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது. அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று அதிரடியாகப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், "எனது கணவர் கடந்த 12 ஆண்டுகளாக வீட்டிலிருந்து விலகியே இருக்கிறார். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவருக்குத் தனது தார்மீகக் கடமை என்ன என்பது நன்றாகத் தெரியும்," என்று ஜடேஜாவை வானளாவப் புகழ்ந்தார்.
ரவீந்திர ஜடேஜா ஒரு ஒழுக்கமான வீரர் என்று அவர் சொல்வதில் தவறில்லை. ஆனால், "அணியில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் தீய பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள்" என்று அவர் ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம். ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் ஒரு அணியைப் பற்றி, ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ரிவாபா இப்படிப் பொதுவாகக் குற்றம் சாட்டியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது சக வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்தான் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிலிருந்து விலகி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். கிரிக்கெட் வாழ்வின் கடைசி சில ஆண்டுகளில் இருக்கும் ஜடேஜா, தனது பழைய அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், அவரது மனைவி கிளப்பியுள்ள இந்த சர்ச்சை அவருக்குத் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தலாம்.