டர்பன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு முனையில் நின்று அதிரடியாக விளையாடும் போது, எனது பணி விக்கெட்டை காப்பாற்றி அவருக்கு உதவி செய்வது மட்டும்தான் என்று இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் சீனியர் வீரர்களின் கவனம் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், இளம் வீரர்களின் கவனம் டி20 கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

அதேபோல் இந்திய அணியில் சீனியர் வீரர்களின் இடத்தை நிரப்புவதற்காக இளம் வீரர்களையும் பிசிசிஐ தயார் செய்து வருகிறது. அதில் முக்கியமான வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்.
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்கி வெளுத்து கட்டினார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடும் பட்சத்தில், மறுமுனையில் நிற்கும் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து வருகிறார்.
இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அபாயகரமான வீரர்களாக உள்ளனர். இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், முதல் பந்து முதலே அதிரடியாக விளையாட கூடிய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரை போன்ற வீரர்களை தடுத்து நிறுத்தவே முடியாது என்று சொல்லலாம். சில ரிஸ்க்களை திட்டமிட்டு செயல்படுத்துவதோடு, அணியின் தேவை என்ன என்பதை கணக்கில் கொண்டு தான் எனது ஆட்டம் இருக்கும்.
அவர் ஒரு முனையில் அதிரடியாக விளையாடும் போது, மறுமுனையில் விக்கெட்டை காப்பாற்றி அவருக்கு உதவுவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது இந்திய அணி வீரர்களுக்கு இடையில் நீண்ட சிக்சர்களை விளாசக் கூடிய வீரர் யார் என்ற போட்டி ஏற்பட்டது.
அதனால் பயிற்சியின் போது சிக்சர் அடித்து விளையாடியது ஜாலியான அனுபவமாக இருந்தது. அந்த போட்டியில் ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருமே அனைத்து இந்திய வீரர்களை விடவும் நீண்ட சிக்சர்களை விளாசி அசத்தினர் என்று தெரிவித்தார். 2007ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி கட்டமைப்பட்டிருப்பது அடுத்த டி20 உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.