கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற போராடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 124 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமாவின் அபார ஆட்டத்தால் 153 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய பவுமா கடைசி வரை களத்தில் இருந்து 55 ரன்களை எடுத்தார். இதையடுத்து 124 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேற, கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் வாஷிங்டன் சுந்தர் - துருவ் ஜுரெல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வாஷிங்டன் சுந்தர் தனது முழு டிஃபென்ஸையும் வெளிப்படுத்தி களத்தில் நிற்க, துருவ் ஜுரெல் ஒரு ஷார்ட் பாலில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு 13 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் களம் புகுந்தார்.
ஏற்கனவே சுப்மன் கில் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பதால், ரிஷப் பண்ட் பொறுப்பு அதிகரித்திருந்தது. ஆனால் முதல் பந்திலேயே ஸ்வீப் ஷாட் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். அது கேட்சிற்கு செல்ல, டிஆர்எஸ் வரை சென்று தப்பித்தார். ஆனால் ரிஷப் பண்ட் பொறுமையை தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர் ஹார்மர் அதிகமாகவே சோதித்தார்.
ஒரு கட்டத்தில் பேட்டை ஓங்க, அது நேராக ஹார்மரின் கைகளிலேயே சென்று விழுந்தது. இதனால் ரிஷப் பண்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெளியில் அக்சர் படேல் மட்டுமே இருப்பதால், இந்திய அணி வெற்றிக்கு மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.