சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியுள்ள 10 இன்னிங்ஸிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 34.1 ஓவரில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 76 ரன்களை விளாசினார். இவருக்கு பின் சுப்மன் கில் 26 ரன்களை சேர்த்தார். மற்ற அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்தை ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் சர்மா, இந்திய அணிக்கு தேவையான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றினார். தொடக்க வீரராக அவர் ஒரு 10 ஓவர்கள் நின்றிருந்தால் கூட பின்னர் வந்த வீரர்கள் எளிதாக ஓரளவிற்கு பழைய பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்திருக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா மண்ணில் ரோகித் சர்மா இதுவரை ஒருமுறை கூட சிறப்பாக விளையாடியதில்லை. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, அதிகபட்சமாக 47 ரன்களை தான் விளாசி இருக்கிறார். மொத்தமாக 128 ரன்களை 12.8 பேட்டிங் சராசரியுடன் விளையாடி இருக்கிறார்.
ஏற்கனவே ரோகித் சர்மா வெளிநாட்டு ஆடுகளங்கள் என்றாலே மோசமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துவார். கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தான் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி இருக்கிறார். ரோகித் சர்மா சிறப்பாக ஆடிய ஒரே அந்நிய டெஸ்ட் தொடரும் அதுதான். இதனால் அடுத்த போட்டியிலும் ரோகித் சர்மா சொதப்பினால் அவரின் கேப்டன்சி பதவிக்கே சிக்கல் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.