ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால் கடுப்பான ரோஹித் சர்மா, மைதானத்திலேயே இளம் பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை நிறுத்தி ஆக்ரோஷமாக 'வகுப்பு' எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில், இந்தியா நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து, தொடரை 1-1 என சமன் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்ததே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்கா சேஸிங் செய்தபோது 37-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரில் பவுண்டரிகள் சென்ற வண்ணம் இருந்தன. மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்தது.
இதனால் பொறுமை இழந்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பிரசித் கிருஷ்ணாவை தடுத்து நிறுத்தினார். உடனே மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவையும் அருகில் அழைத்தார். இருவரையும் வைத்துக்கொண்டு, பந்தை எங்கே வீச வேண்டும், எப்படி வீசக்கூடாது என்று மிகவும் ஆக்ரோஷமாக சைகை காட்டி அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக பிரசித் கிருஷ்ணா வீசிய லைன் மற்றும் லென்த் ரோஹித்துக்குத் திருப்தி அளிக்கவில்லை. பனிப்பொழிவு காரணமாகப் பந்து வழுக்கியதால் பிரசித் கிருஷ்ணா ஒரு 'பீமர்' பந்தையும் வீசியிருந்தார். 6 ஓவர்கள் வீசிய அவர் 64 ரன்களை விட்டுக்கொடுத்தது ரோஹித் டென்ஷன் ஆக முக்கிய காரணமாக இருந்தது.
ரோஹித் ஆலோசனை அளித்த பிறகு அந்த ஓவர் ஓரளவு நன்றாக முடிந்தாலும், தென்னாப்பிரிக்காவின் வெற்றியைக் தடுக்க முடியவில்லை.
கேப்டன் எய்டன் மார்க்ரம் 110 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
இளம் வீரர்கள் மேத்யூ பிரீட்ஸ்கே (68) மற்றும் டெவால்ட் பிரேவிஸ் (34 பந்துகளில் 54 ரன்கள், 5 சிக்ஸர்கள்) ஆகியோர் ருத்ர தாண்டவம் ஆடினர். கடைசியில் கார்பின் போஷ் அதிரடி காட்ட, தென்னாப்பிரிக்கா 359 ரன்களை சேஸ் செய்து, அந்நிய மண்ணில் தங்களது அதிகபட்ச சேஸிங் சாதனையைப் படைத்தது.
முன்னதாக பேட்டிங் செய்த இந்திய அணியில், விராட் கோலி (102) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (105) ஆகியோர் சதமடித்தனர். இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் 66 ரன்கள் விளாசினார். 358 ரன்கள் குவித்தும், பந்துவீச்சு சொதப்பலால் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.