மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றி பயணத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்னும் 12 நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நவ.22ல் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வரும் சூழலில், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தை தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே விராட் கோலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில், மற்ற வீரர்கள் 2 பேட்ச்களாக பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் இருக்கும் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணத்தில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி நேரத்தில் விலகியிருக்கிறார்.
நேற்று முன் தினம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி இருவருடனும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் ரோஹித் சர்மா இந்திய அணி வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் மனைவி ரித்திகாவுடன் நேரம் செலவிடும் வகையில் ரோஹித் சர்மா திட்டத்தை மாற்றி இருக்கிறார்.
ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினர் 2வது குழந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எப்போது ஆஸ்திரேலியா செல்வார் என்பது தெரியாமல் உள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது ரோஹித் சர்மா பயணிக்கவில்லை என்பதால், அது உறுது செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் ரோஹித் சர்மாவின் இடத்தில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் கேஎல் ராகுலுக்கு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய போது மாற்று தொடக்க வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா மண்ணில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால், அதனை சமாளிக்க கூடுதல் அனுபவம் தேவையாக உள்ளது. இதனால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக இந்திய அணி களமிறக்கும் என்று பார்க்கப்படுகிறது. மேலும் நாளை காலை 9 மணியளவில் நடக்கவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் மட்டும் கலந்து கொள்ள உள்ளது தெரிய வந்துள்ளது.