மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக செயல்பட்டது ரசிகர்களை கடுப்படைய செய்தது. குறிப்பாக பவுலர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார்கள். பேட்டிங் செய்யவே கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் பௌண்டரி சிக்சராக அடிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அல்வா பந்துகளை போட்டுக் கொடுத்தனர்.
குறிப்பாக சர்துல் தாக்கூர் 19 ஓவர் வீசி 101 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதேபோன்று பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்கள் வீசி 93 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பும்ரா மற்றும் சிராஜ் தவிர மற்ற அனைத்து வீரர்களுமே கடுமையாக தடுமாறினர்.

இந்த நிலையில் இந்திய அணி புதிய வீரர்களை களத்திற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இன்னும் நாங்கள் பிளேயிங் லெவனை முடிவு செய்யவில்லை யார் வேண்டும்? யார் வேண்டாம் என்பது குறித்து விவாதித்து முடிவு எடுப்போம். நான் எப்போதுமே சொல்வது ஒன்றுதான்.
வீரர்களுக்கு நாங்கள் எப்போதுமே துணை நிற்போம். அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர்களுடைய திறமைக்கு நாங்கள் துணையாக நிற்போம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் தகுதி பிரசித் கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. ஆனால் இதுதான் அவருக்கு முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றத்துடன் சரியாக அவர் பந்து வீசவில்லை. எங்கள் அணியின் பவுலர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இல்லை.
இதனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இதேபோன்று டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவினாலும் அதன் பிறகு சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் நிகழ்வு பலமுறையை இந்தியா செய்திருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ள ரோகித் சர்மா மீண்டும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டிய ரோகித் சர்மா பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை நம்பி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.