ராஞ்சி: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடியின் இமாலய சாதனையை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகர்த்தெறிந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த உலக வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை, ஒருநாள் அரங்கில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

அவரை நெருங்கிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் தனது 3-வது சிக்ஸரை விளாசியபோது, அப்ரிடியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியல்:
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து) அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை ரோஹித் வைத்திருந்தார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் அவரே சிக்ஸர் மன்னன் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவர் வெளியேறினாலும், அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரோஹித் வெளியேறினாலும், மறுமுனையில் விராட் கோலி 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்து (21.2 ஓவர் நிலவரப்படி) களத்தில் இருந்தார். இந்திய அணி 21.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.