விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஒயிட்வாஷ்' ஆகி கடும் நெருக்கடியில் இருந்தார் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அடுத்து தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்தால் அவரது பதவிக்கே ஆபத்து என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், அவரால் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரே அவரது பதவியை காப்பாற்றிக் கொடுத்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் நடந்த வாழ்வா? சாவா? ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்ற இந்தியா, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை 0-2 என இழந்ததால், கம்பீர் மீது பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அடுத்து நடந்த ஒருநாள் தொடரும் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்ததால், இந்த 3-வது போட்டியில் தோற்றிருந்தால், கம்பீரின் பதவிக்கே பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். அந்த ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியது ரோஹித் மற்றும் கோலி கூட்டணிதான்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக் தனி ஆளாகப் போராடி 89 பந்துகளில் 106 ரன்கள் (8 பவுண்டரி, 6 சிக்ஸர்) குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் (4 விக்கெட்) மற்றும் பிரசித் கிருஷ்ணா (4 விக்கெட்) ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு, தென்னாப்பிரிக்காவை 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்குச் சுருட்டினர்.
271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தனர். கம்பீரின் அழுத்தத்தால் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, தான் இன்னும் பேட்டிங்கில் ஃபார்மில் இருப்பதை நிரூபித்தார். 73 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய அவர், முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்.
ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, உள்ளே வந்த விராட் கோலி, ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார். ஒருபுறம் ஜெய்ஸ்வால் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்து சதம் அடித்தார். மறுபுறம், இந்தத் தொடர் முழுவதும் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, 45 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, கம்பீரின் உத்திகள் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ரோஹித், கோலி போன்ற சீனியர்களை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியது தவறு என்று பேசப்பட்டது. இன்று அதே சீனியர்கள் மற்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து, கம்பீரின் மானத்தைக் காப்பாற்றியுள்ளனர். இந்த ஒருநாள் தொடர் வெற்றி, கம்பீருக்குச் சற்று நிம்மதியை அளித்திருந்தாலும், சீனியர் வீரர்களின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தும் ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.