ராய்ப்பூர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர் ரோஹித் சர்மா, சக வீரர் குல்தீப் யாதவை பார்த்து ஆக்ரோஷமாக முறைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் இந்தியா 359 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா 14 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், பீல்டிங்கின் போது தனது உணர்ச்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்தினார். அதற்கு பலியானவர் வழக்கம் போல குல்தீப் யாதவ் தான்.

தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்து கொண்டிருந்த 35-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சர் பந்தை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே 'ஷார்ட் தேர்ட்' திசையில் அடித்தார். அங்கே பீல்டிங் நின்றுகொண்டிருந்தவர் குல்தீப் யாதவ். அது மிகவும் சுலபமாகத் தடுக்கக்கூடிய பந்துதான். ஆனால், குல்தீப் யாதவ் அதைச் சரியாகக் கணிக்காமல் கோட்டை விட்டார். பந்து அவர் கையில் சிக்காமல், அவருக்குக் கீழே நழுவி பவுண்டரிக்குச் சென்றது.
மிக முக்கியமான கட்டத்தில், சுலபமான பந்தை குல்தீப் மிஸ் செய்து பவுண்டரி விட்டதைப் பார்த்த ரோஹித் சர்மா அதிர்ச்சியடைந்தார். கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித், குல்தீப் யாதவை பார்த்து ஒருவித வெறுப்புடன் தலையை ஆட்டியபடியே கூர்ந்து முறைத்தார்.
அவர் எதுவும் பேசவில்லை என்றாலும், அந்தப் பார்வையிலேயே "இப்படியா பீல்டிங் செய்வது?" என்ற ஆதங்கம் மற்றும் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. ரோஹித்தின் இந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள், "குல்தீப் யாதவ் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்" என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த சூழலில், குல்தீப் யாதவின் இந்த மிஸ்-பீல்டிங் ரோஹித் சர்மாவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்படையச் செய்தது. இறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ரோஹித் சர்மாவுக்கும் குல்தீப் யாதவுக்கும் இடையே இது புதிதல்ல. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவின் போது, குல்தீப் பிளேசரை அணியத் தாமதப்படுத்தியபோது ரோஹித் அவரைக் கடிந்துகொண்டது வைரலானது. தற்போது மீண்டும் ரோஹித்தின் கோபத்திற்கு குல்தீப் ஆளாகியுள்ளார்.
தொடர் 1-1 எனச் சமனில் உள்ள நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.