அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தொடரை நடத்தும் நாடான இந்திய அணி லீக் சுற்றில் எவ்வித சிரமமும் இன்றி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தது.
ஆனால் சூப்பர் 8 சுற்றில் இந்தியா எதிர்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் தோல்வியைச் சந்திக்காத அணிகள் என்பதால் இனி வரும் போட்டிகள் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அணிக்குச் சிறிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அவர் எப்போது மீண்டும் ஃபார்முக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், எதிர்வராகும் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான மூன்று வீரர்களைக் கணித்துக் கூறியுள்ளார்.
தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அந்த மூன்று வீரர்களின் செயல்பாடுகள் தான் அரையிறுதியை நோக்கிய இந்தியாவின் பயணத்தைத் தீர்மானிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் பங்கர் குறிப்பிடும் முதல் வீரர் இஷான் கிஷன். சமீபத்தில் இந்திய அணிக்குத் திரும்பியதில் இருந்து இஷான் கிஷன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அபிஷேக் சர்மா ரன் எடுக்கத் திணறி வரும் தற்போதைய சூழலில், இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இஷான் கிஷனிடம் உள்ளது. அவர் நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது அணியின் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமாக அமையும் என்று பங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது வீரராக கேப்டன் சூர்யகுமார் யாதவை அவர் தேர்வு செய்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் போட்டியின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். அவரது இந்தத் தொடர்ச்சியான பங்களிப்பு சூப்பர் 8 சுற்றில் மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது மற்றும் முக்கியமான வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுத் தாக்குதல் பலமாக உள்ளது குறித்துப் பலரும் பேசி வருகின்றனர். ஆனால், ஆட்டம் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டும்போது அல்லது அணியின் வெற்றிக்கு விக்கெட்டுகள் தேவைப்படும்போது பும்ராவின் பந்துவீச்சு தான் இந்தியாவைக் காப்பாற்றும் என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
லீக் சுற்றில் எளிதான வெற்றிகளைப் பெற்ற இந்திய அணிக்கு, சூப்பர் 8 சுற்றில் காத்திருக்கும் சவால்களைச் சமாளிக்க இந்த மூன்று வீரர்களின் ஆட்டமும் கைக்கொடுக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.