கேப்டவுன்: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது தோளில் காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி வரலாற்றில் மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்ததே காரணமாக அமைந்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் வெறும் 19 ஓவர்கள் வீசி 101 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இருப்பினும் ஷர்துல் தாக்கூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமி காயம் காரணமாக விலகிய சூழலில், அவருக்கு பின் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக ஷர்துல் தாக்கூர் மட்டுமே உள்ளார்.
கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டே போது, இந்திய அணிக்காக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் 2வது போட்டியில் கம்பேக் கொடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதற்காக இன்றே ஷர்துல் தாக்கூர் பயிற்சியை தொடங்கினார். சீனியர் வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் ஷர்துல் தாக்கூர் மட்டுமே வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.
அதிலும் ஷர்துல் தாக்கூர் முதற்கட்டமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இவருக்கு பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் த்ரோ டவுன் செய்ய, கொஞ்சம் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளும் வகையில் வீசினார். அந்த பந்து எதிர்பாராவிதமாக ஷர்துல் தாக்கூரின் தோளில் பலமாக அடித்துள்ளது. இதன்பின் உடனடியாக ஐஸ் பேக் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் ஷர்துல் தாக்கூர் சில நிமிடங்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். அதன்பின் பவுலிங் பயிற்சியை செய்யாமலேயே பயிற்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ஷர்துல் தாக்கூர் காயமடைந்திருக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.