ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஜடேஜா மற்றும் சுப்மன் கில் இருவரும் இதுவரை இந்திய அணியுடன் இணையவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டி20 போட்டியும், டிச.12ல் 2வது டி20 போட்டி மற்றும் டிச.14ஆம் தேதி 3வது டி20 போட்டியும் நடக்கவுள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடரவுள்ளார். ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து இன்னும் மீளாத சூழலில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர்கிறார். அதேபோல் அவருக்கு உதவியாக துணை கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக ஜடேஜா இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஜடேஜா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டனர். இதன் பின் நேற்று ஓய்வில் இருந்த இந்திய வீரர்கள், இன்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த 3 வீரர்கள் இதுவரை இந்திய அணியுடன் இணையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக பயணிக்க முடியாமல் இருக்கிறார். இதுகுறித்து முன்கூட்டியே தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களிடமும் உரிய முறையில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் இருவரும் இதுவரை இந்திய அணியுடன் இணையவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு பின் ரவீந்திர ஜடேஜா குடும்பத்தினருடன் பாரிஸ் சுற்றுலா சென்றுள்ளார். அதேபோல் சுப்மன் கில் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் இதுவரை தென்னாப்பிரிக்கா செல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.