கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் ஆடிய போது திடீரென கழுத்தில் வலி ஏற்பட்டு சுப்மன் கில் ஓய்வறைக்கு திரும்பினார். இதன்பின் ஓய்வறை சிகிச்சை பலனளிக்காததால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது பிசிசிஐ இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 189 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி பேட்டிங்கின் போது கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் ஆடிய போது, திடீரென ரிட்டையர்ட் ஹர்ட்டாகி ஓய்வறைக்கு திரும்பினார். அதன்பின் சுப்மன் கில் வெளியில் வரவே இல்லை. இதனால் பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார்.
2வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. கேப்டன் பவுமா - பாஸ்ச் கூட்டணி களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாள் ஆட்டத்திற்கு பின் கேப்டன் சுப்மன் கில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அப்போது சுப்மன் கில்லின் நிலைமை கொஞ்சம் மோசமாக, உடனடியாக ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ மருத்துவர்கள் குழு சுப்மன் கில்லை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
நேற்று சுப்மன் கில் கழுத்தில் இருந்த வலி சற்று குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்தப் போட்டிக்கு முன்பாக முழு ஓய்வு எடுத்து எடுத்து அடுத்தப் போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு பேட்ஸ்மேன் குறைவாக விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.