கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன் - மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியதால், பொறுப்பு கேட்பன் ரிஷப் பண்ட் முதல் ஸ்பெல்லிலேயே குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
இருப்பினும் இருவருமே நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஆனால் குல்தீப் யாதவ் பந்தில் ரிக்கல்டன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் மார்க்ரன் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று 4 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். தொடர்ந்து பவுமா - முல்டர் இணை சிறுது நேரம் போராடியது. ஆனால் முல்டர் 11 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்க, அடுத்த 3 பந்துகளில் வந்த சோர்சியும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஸ்டப்ஸ் ஜடேஜாவின் சுழலில் எப்படி போல்டாகினோம் என்று புரியாமல் 5 ரன்களில் நடையை கட்ட, அடுத்து வந்த கைல் 9 ரன்களிலும், மார்கோ யான்சன் 13 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர். ஆனால் அசராமல் ஸ்பின்னர்களை நின்று கணித்து ஆடிய பவுமா 29 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியாக 2வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்து, 63 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனால் நாளையுடன் இந்தப் போட்டி முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.