கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 124 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்தது. இதன்பின் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி பவுமாவின் அபார ஆட்டத்தால் 153 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் பவுமா 55 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 124 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணி வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கேற்ப ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகியும், கேஎல் ராகுல் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் நங்கீரமிட்டு நிதானமாக விளையாட, துருவ் ஜுரெல் பவுண்டரி அடிக்க விரும்பி 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்களில் வெளியேற, இந்திய அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா கூட்டணி இணைந்து சிறிது நேரம் போராடியது. ஆனால் ஹார்மரின் பவுலிங்கால் ஜடேஜா 18 ரன்களில் வெளியேறினார். அப்போது வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை வீழ்த்த மார்க்ரம்மை அட்டாகில் கொண்டு வந்தார் பவுமா.
அது தென்னாப்பிரிக்கா அணிக்கு பலன் கிடைத்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அக்சர் படேல் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுக்க, சிராஜ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் ஆகினார். இதனால் இந்திய அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக டெம்பா பவுமா மாறி இருக்கிறார்.