பார்படாஸ் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இன்று இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுமே தோல்வியே தழுவாமல் ஃபைனலுக்கு முன்னேறி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா குறித்து கங்குலி சொன்ன விஷயம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, ரோகித் சர்மா ஆறு மாதத்தில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்கக் கூடாது.

ஒரு வேளை அதை போல் இரண்டு பைனலில் ரோகித் சர்மா தோற்றால் அவர் நேரடியாக பார்படாசில் உள்ள கடலில் குதித்து விடுவார். இந்த தொடரில் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டது. மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பிரமாதமாக விளையாடி வருகிறார். இறுதிப் போட்டியிலும் இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 5 கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். இது உண்மையிலேயே சிறந்த சாதனைதான். சர்வதேச போட்டியில் வெல்வதைவிட ஐபிஎல் போட்டிகளில் வெல்வது மிகவும் கடினம். நான் சொல்வதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டை விட ஐபிஎல் சிறந்தது என்று சொல்லவில்லை.
ஆனால் ஐபிஎல் தொடரில் நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் 12,13 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்.
ஆனால் உலக கோப்பையில் நீங்கள் 8, 9 போட்டிகளில் வென்றாலே போதும். எனினும் உலக கோப்பையை வெல்வதிலே மிகுந்த மரியாதை இருக்கின்றது. இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா அதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன். நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தான் சிறந்த ஒரு அணியாக விளங்குகிறது.
இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டம் இந்தியாவிடம் இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். இந்திய அணி இறுதிப் போட்டியில் சுதந்திரமாக விளையாட வேண்டும். அவர்கள் வெற்றியாளர் இடத்தில் நிற்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.இறுதிப் போட்டியில் இந்தியா தோற்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.
ஆனால் நான் அதை வித்தியாசமாக பார்க்கின்றேன். இறுதிப் போட்டிக்கு சொல்வதே உண்மையில் ஒரு நல்ல விஷயம் தான். பல்வேறு அணிகள் முதல் சுற்று, இல்லை இரண்டாவது சுற்று வெளியேறி விடுகிறார்கள். ஆனால் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற 50 உலக கோப்பையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
எனினும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஆனால் உண்மையில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா தான் தொடர் முழுவதும் சிறந்த அணியாக விளங்கியது. ஒரே ஒரு மோசமான நாள் இந்தியாவுக்கு மைனஸ் ஆக மாறியது. இதனால் தான் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம் என்று கூறுகிறேன் என்று கங்குலி கூறியுள்ளார்.