சென்சுரியன்: இந்திய கிரிக்கெட்டில் அகராதியில் இருந்து "வேலைப்பளு" என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விராட் கோலி, கேஎல் ராகுலை தவிர்த்து எந்த பேட்ஸ்மேனுக்கும் தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாட தெரியவில்லை.

அதேபோல் டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு 20 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பது அடிப்படை விதிகளில் ஒன்றாகும். அதற்கான பவுலர்களுடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கட்டமைக்கப்படவில்லை, ரோகித் சர்மாவின் கேப்டன்சி, இளம் வீரர்களின் குழப்பம் என்று இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடிய டெஸ்ட் போட்டி இதுவாகும்.
எப்படி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியதோ, அதேபோல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியிலும் எந்த முனைப்பும் காட்டாமல் இந்திய அணி சரணடைந்ததாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணிக்குள் பயிற்சி போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டு, மாற்று அணிகளுடம் பயிற்சி போட்டியில் இந்திய அணி பங்கேற்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணிக்குள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றால், வேகப்பந்துவீச்சாளர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த மாட்டார்கள். அது பயிற்சியின் தரத்தையே கேள்விக்குள்ளாக்கும்.
பேட்ஸ்மேன்கள் காயமடைந்த வாய்ப்பிருப்பதாக சிந்தித்து எந்த பவுலர்களும் பவுன்சரை கூட சரியாக வீச மாட்டார்கள். என்னை கேட்டால் தென்னாப்பிரிக்கா ஏ அணியுடனோ அல்லது கவுண்டி அணியுடனோ இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். முதல் டெஸ்ட் மற்றும் 2வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே 7 நாட்கள் இடைவெளி உள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து "வேலைப்பளு" என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.